சசி பெருமாளின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் மிரட்டல்: வைகோ கண்டனம்
ஆக.15, 2015:- மது ஒழிப்பிற்காகப் போராடி, உயிரிழந்த சசி பெருமாளின் குடும்பத்தினரை மிரட்டிய காவல்துறையினரின் நடவடிக்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடந்த 12 ஆம் தேதி சசி பெருமாளின் துணைவியாரிடம் வற்புறுத்தி இரண்டு வெள்ளைத் தாள்களில் மின்வாரிய அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றுள்ளனர்.
சசி பெருமாள் இல்லத்து மின் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 13 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சசி பெருமாள் இல்லத்துக்குச் சென்ற காவல்துறையினர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் எங்கு வேலை செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டு மிரட்டி உள்ளனர்.
சசி பெருமாளின் குடும்பத்துக்கு யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்றும் கேட்டுள்ளனர். சசி பெருமாளின் மகன் விவேக் இந்த விபரங்களை என்னிடம் தெரிவித்ததோடு, குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறினார்.
காவல் துறையின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பலத்த கண்டனம் தெரிவிப்பதோடு, இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறையினர் கைவிடாவிட்டால் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து சேலத்தில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.