தமிழ்நாடு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இனி 'இளைஞர் எழுச்சி நாள்'

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இனி 'இளைஞர் எழுச்சி நாள்'

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.31, 2015:- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்டோபர், 15ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும், 'இளைஞர் எழுச்சி நாளாக' கொண்டாடப்படும். அவர் பெயரில், சுதந்திர தினத்தன்று, விருது வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என, பலரையும் இந்தியாவிற்கு, தமிழன்னை வழங்கி உள்ளார்.


பன்முக தலைவர்:அந்த வகையில், 'இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், தலைசிறந்த விஞ்ஞானி, திருக்குறள் வழி நடந்தவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன்' என, போற்றப்படும், பன்முகத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம், தமிழகம் பெற்றெடுத்த தலைமை மகனாவார்.


ராமேஸ்வரத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும், சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும், ஜனாதிபதியாக திகழ்ந்தார்.

ஜனாதிபதியாக இருந்தபோதும், அதன் பிறகும், அவரது சிந்தனை, எப்போதும், மாணவர்கள், இளைஞர்கள் குறித்தே இருந்தது. வரும், 2020க்குள், இந்தியா வல்லரசாக வேண்டும் என, கனவு

கண்டவர்.


மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் தான், அந்தக் கனவை நனவாக்க முடியும் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணவர்கள் இடையே, தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான், மாணவர்களை, 'கனவு காணுங்கள். அந்த கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என, தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.

ஆசிரியராக விரும்பினார்

'வெற்றி பெற வேண்டும் என்றால், பதற்றமில்லாமல் இருப்பது தான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி' என்று, வெற்றியின் ரகசியத்தை, மாணவர்களுக்கு போதித்தார். அவர் ஆசிரியராக இருப்பதையே, பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணவர்களையும், தன் பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு, அவர்கள் வாழ்வில், உன்னத நிலையை அடையவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு, சிறந்த பங்காற்றிடவும், உந்துசக்தியாக விளங்கினார்.

எனவே, அப்துல் கலாம் பிறந்த தினமான, அக்டோபர், 15ம் தேதி, 'இளைஞர் எழுச்சி நாள்' என, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும். 'வலிமையான பாரதம்; வலிமையான தமிழகம்' என்ற கொள்கை அடிப்படையில், தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சுதந்திர தினத்தன்று

அதற்கு வலுவூட்டும் வகையில், அப்துல் கலாம் நினைவை போற்றும் விதமாக, 'டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது' ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்கு பாடுபட்டு வரும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.

விருது பெறுபவருக்கு, எட்டு கிராம் தங்கத்தாலான பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்