தமிழ்நாடு அப்துல்கலாம் மறைவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடாதது அவமரியாதை: இளங்கோவன்

அப்துல்கலாம் மறைவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடாதது அவமரியாதை: இளங்கோவன்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.28, 2015:-   தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

‘பாரத ரத்னா” விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமான செய்தி கேட்டு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நாடு முழுவதும் 7 நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் மேற்கண்ட 7 நாள்களில் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு சார்பாக மறைந்த அப்துல் கலாமுக்கு துக்கம் அனுசரிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் ஞானதேசிகன் வழக்கம் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று கூறியிருக்கிறார். தமிழகத்திலே பிறந்து, அணு விஞ்ஞானியாக வளர்ந்து குடியரசுத் தலைவராக பதிவான வாக்குகளில் 90 சதவீத வாக்குகளைப் பெற்று மக்கள் குடியரசுத் தலைவர் என்று நற்பெயர் பெற்றவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் தமிழக அரசுக்கு ஏன் இந்த அலட்சியம்? துக்கம் அனுசரிக்கும் வகையில் எந்த மாணவர்களை, இளைஞர்களை நேசித்தாரோ அவர்கள் படிக்கிற பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் என்ன தயக்கம்?

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போது தமிழக அரசு மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்? நாட்டு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒட்டுமொத்தமாக போற்றி பாராட்டப் பெற்ற மாசுமருவற்ற டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு அவர் பிறந்து, வளர்ந்த சொந்த மாநிலத்திலேயே தமிழ் மண்ணிலேயே துக்கம் அனுசரிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு மறுக்கலாமா? மறுப்பது நியாயமா? தமிழக அரசின் இந்த போக்கை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

மறைந்த அப்துல் கலாமின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பதோடு, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்